யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து, இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கடந்த புதன்கிழமை பயணிக்க இருந்த பயணிகளில், இரண்டு இந்திய பிரஜைகளின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய போது, சந்தேகத்திற்கிடமான 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் 26 பேரையும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமருனையில் அனுமதித்து, ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது 06 பேரின் உடலினுள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த 06 பேரையும், தங்கத்தை உடமையில் வைத்திருந்த ஏனைய இரண்டு பேரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஏனைய 18 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 பேரில், இரண்டு இலங்கை பெண்களும் 06 இந்திய ஆண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.