ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் உள்ள, அசாஹியாமா மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை அங்கிருந்த கழிவு எரியூட்டியில் (Incinerator) வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று, மிருகக்காட்சி சாலையில் உள்ள எரியூட்டில் வீசி, பல மணி நேரம் எரித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், எரியூட்டி அமைந்துள்ள பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் உயிரிழந்த பெண்ணின் உடலோ அல்லது உடற்பாகங்களோ இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அசாஹியாமா மிருகக்காட்சிசாலையானது ஜப்பானின் மிகவும் பிரபலமான மிருகக்காட்சிசாலைகளில் ஒன்றாகும். இது பராமரிப்புப் பணிகள், கோடைக்கால முன்னேற்பாடுகளுக்காக ஏப்ரல் 8 முதல் 28 வரை மூடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 29 ஆம் திகதி ‘கோல்டன் வீக்’ விடுமுறையை முன்னிட்டு பூங்காவை மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது அங்கு நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை, தேடுதல் பணிகளால், “நிலைமை சுமூகமாகும் வரை” திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. (Japan Times)