உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழங்களில் ஜப்பானின் ‘மியாசாகி’ மாம்பழம் முதலிடம் வகிக்கின்றது.
ஜப்பானில் ஒரு ஜோடிமியாசாகி மாம்பழங்கள் சுமார் 600,000 ஜப்பானிய யென் (இலங்கை பெறுமதியில் 3.5 லட்சம் ரூபாய்) வரை ஏலத்தில் விற்பனையாகின்றன.
இதன் விசேட அம்சங்கள் மற்றும் வளர்ப்பு முறையே இந்தளவு அதிக விலைக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் விளையும் இந்த மாம்பழம், அதன் தோற்றம் மற்றும் வடிவம் காரணமாக “சூரியனின் முட்டை என அழைக்கப்படுகின்றது.
சாதாரண மாம்பழங்கள் போலன்றி, இவை மாணிக்கக் கல் போன்ற அடர் சிவப்பு நிறத் தோலைக் கொண்டுள்ளன. நார் இல்லாத, அதிக சாறு நிறைந்த இதன் உட்பகுதி 15% இற்கும் அதிகமான சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது.
இவை பச்சை வீட்டு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன.
பழத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமமாகச் சூரிய ஒளி படுவதற்காக, மரங்களுக்குக் கீழே பிரதிபலிப்பான்கள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு பழமும் தனித்தனியாக வலையமைப்பிற்குள் கட்டித் தொங்கவிடப் படுகின்றன.
இந்த நிலையில், 350 கிராமுக்கு அதிக எடை, கீறல்களற்ற முழுமையான சிவப்பு நிறம் கொண்ட சிறந்த பழங்கள் மாத்திரமே ஏலத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றன.
தற்போது இந்தியா (ஒடிசா), தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த மாம்பழம் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.