வடக்கு ஜப்பானின் இவாட் (Iwate) மாகாண கடற்கரைக்கு அப்பால் நேற்று திங்கட்கிழமை மாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் இதைவிடப் பெரிய நில அதிர்விற்குத் தயாராக இருக்குமாறு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவாட் கடற்கரையிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில், 20 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.
இதன்படி ஹொக்கைடோ முதல் சிபா (Chiba) மாகாணம் வரையிலான 182 நகராட்சிகளுக்கு “விசேட எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவாட் மாகாணத்தின் குஜி துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரமான சுனாமி அலைகள் பதிவாகின.
ஹொக்கைடோ, ஆமோரி மற்றும் மியாகி பகுதிகளில் 20 முதல் 40 செ.மீ உயர அலைகள் அவதானிக்கப்பட்டன.
நில அதிர்வைத் தொடர்ந்து சுமார் 1,72,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
அத்துடன் சுமார் 100 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புகுஷிமா மற்றும் ஒனாகவா அணுமின் நிலையங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.