வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகர சபையில் நடைபெற்ற சில செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , முதல்வரான சு.காண்டீபனையும் , உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றரிக்ககையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும் , உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை வறிதாக்கியும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார்

இதேவேளை,சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்ததற்காக மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை உப தவிசாளர் பதவியிலிருந்து மட்டுமன்றி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருக்கும் சூழலில், எதிர்ப்புக் குரல்களை அடக்கவும் விமர்சகர்களை தண்டிக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆளுநரின் அதிகாரங்களையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.