மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று (02) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று மயானத்திற்குச் சென்ற நபர் ஒருவர், அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரையும் சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று (03) வெள்ளிக்கிழமை குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.