இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் திருமணமான இரண்டாவது நாளே மணமகள் குழந்தை பெற்று இருக்கிறார். இதற்கு அந்த மாப்பிள்ளை தான் காரணம் என்று கூறி அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ஜஸ்ரா கிராமத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பெப்ரவரி 25ஆம் திகதி மணமகள் மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மறு நாள் காலை குறித்த பெண் வழக்கம் போல் அதிகாலை எழுந்து வீட்டு வேலைகளை செய்துள்ளார். அன்று மாலை பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுனர்.
அந்த பெண்ணின் உடல் நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி உடல்நிலை மோசமாக இருப்பதால் உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதாக மணமகனின் பெற்றோர் சாடியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை தங்கள் மணமகளாக ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், பெண்ணின் தந்தையோ வேறு விதமாகக் கூறுகிறார். அவர் கூறுகையில், “இவர்களுக்குக் கடந்தாண்டு மே மாதமே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் பிறகு இருவரும் அவ்வப்போது சந்தித்துள்ளனர். இதன் காரணமாக எனது மகள் கர்ப்பமடைந்து இருப்பார்” எனச் சொல்லியிருக்கிறார்
ஆனால், அந்த மாப்பிள்ளையோ இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தங்கள் திருமணம் நான்கு மாதங்களுக்கு முன்பு அக்டோபரில் தான் நிச்சயிக்கப்பட்டது என்றும் அந்த பெண்ணை மனைவியாக ஏற்கும் மனநிலையில் தான் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், “திருமணத்திற்கு செலவு செய்த பணம் கூட வேண்டாம். ஆனால், நாங்கள் பெண் வீட்டாருக்கு கொடுத்த பரிசுகளை திரும்ப தர வேண்டும். அவர்கள் பெண்ணையும் அழைத்துச் செல்லலாம்” என்று கூறுகிறார்.
இருப்பினும் தங்கள் பெண்ணின் கர்ப்பத்திற்கு மாப்பிள்ளையே காரணம் எனச் சொல்லும் பெண் வீட்டார், “அவர்கள் ஏற்கனவே வரதட்சணையாக அது எது என எல்லாம் வாங்கிவிட்டனர். இப்போது எனது மகளைக் கைவிடுவது சரியான போக்கு இல்லை.. அவர்கள் எங்கள் மகளை ஏற்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார்