பொகவந்தலாவ ராணிக்காடு பகுதியிலிருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிக்காடு – பொகவந்தலாவ பிரதான வீதியில், கேம்பியன் தோட்டப் பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏனைய மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

பேருந்தில் தடையாளி (Break) முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே, இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
