இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வீட்டுத் திட்டத்தின்கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால், அனர்த்த அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகள் அடையாளம் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, 22 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவஸம மற்றும் எல்கடுவ ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்காக இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 28 இலட்சம் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 04 இலட்சம் ரூபாவையும் ஒதுக்கியுள்ளன.
வீட்டுத் திட்டத்தின் பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரபாத் சந்திரகீர்த்தி, வீடுகள் நிர்மாணிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்குத் தேவையான அறிக்கைகளை வழங்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அவர் மேலும் அறிவுறுத்தல் வழங்கினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பு நிதியம் ஆகியன இணைந்து இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே. எஸ். விஜயகீர்த்தி, பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) என். டி. என். புஷ்பகுமார, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டபிள்யூ. ஏ. கே. எஸ். தமயந்தி, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் உட்பட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.