மட்டு.வாழைச்சேனையில் கசிப்புடன் ஒருவர் கைது

-வாழைச்சேனை நிருபர்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கிண்ணையடி குட்டிக்காடு எனும் காட்டுப் பிரதேசத்தில், வாழைச்சேனை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனையோர் தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது 108,500 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் கோடாவும், 4,500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டாரவின் வழிகாட்டலில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்கள் அத்தனையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்