சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொலித்தீன் பைகளை (Shopping bags) விற்பனை செய்வதன் மூலம் பெறும் வரிப்பணம், அரசாங்கத்தின் குறிப்பிட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்தில் வைப்பிலிடப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி பரிசீலனைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றாடல் நீதி மையத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) அழைக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக நவம்பர் 03ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.
சுற்றாடல் பாதுகாப்பு வரிச் சட்டத்தின்படி, சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் பொலித்தீன் பைகளுக்காக வசூலிக்கப்படும் வரிப்பணம், அரசாங்கத்தின் குறிப்பிட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்தில் சேர வேண்டும் என மனுதாரர் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது அவ்வாறு இடம்பெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இது சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த வரிப்பணத்தை அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்தில் வைப்பிலிட உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.