நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வற்புறுத்திய கணவன் : மனைவி புகார்

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டி மனைவியை பொது வெளியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவரது கணவரே குளிக்க வைத்த , சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவமானது , சாமியார் ஒருவரின் மூடநம்பிக்கையின் அடிப்படையில் பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தினரும் பெண்ணை வற்புறுத்தி இவ்வாறு செய்ய வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், குறித்த பெண், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சாமியார் மீது புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தனது கணவரின் குடும்பத்தினர், 2013 ஆம் ஆண்டில் இருந்து வரதட்சனை கேட்டு, தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் , ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற சடங்குகளுக்கு பலமுறை உட்படுத்தியதாகவும் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

சாமியார் ஒருவர், பொது வெளியில் உள்ள அருவி ஒன்றில் நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என கூறியதன் அடிப்படையில் கணவரின் குடும்பத்தினர், அந்த சடங்ககை செய்ய சொல்லி அருகில் உள்ள அருவி ஒன்றிக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தியதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.