அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்த நாள் நிகழ்வு

-யாழ் நிருபர்-

நாடறிந்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்தநாள் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைந்துள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலைக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் நடைபெற்றது.

பண்ணாகம் அண்ணா கலைமன்றம் மற்றும் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது, அமிர்தலிங்கத்தினுடைய திருவருட்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதோடு, பொதுமக்களாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, 95வது பிறந்ததினத்தை நினைவுகூரும் முகமாக தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவனால் கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது.

இந்த பிறந்தநாள் நிகழ்வின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர்கள், பண்ணாகம் அண்ணா கலை மன்றத்தினர், பண்ணாம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.