ஜப்பானில் பிரேசிலிய பெண் மரணம்: இலங்கை இளைஞன் கைது

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் வேலையில்லாத 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நரிட்டாவில் உள்ள வாடகை குடியிருப்பில் மே மாதம் முதலாம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில், அமண்டா போர்ஜஸ் டா சில்வா புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் தீயை அணைக்க முயற்சிக்காதது மற்றும் குடியிருப்பை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

எனினும் மூன்று நாட்களுக்கு பின்னர்  இலங்கையர் கட்டிடத்திற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் கையடக்க தொலைபேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும்.

பிரேசிலிய ஊடகங்களில் வெளியான தகவல்களில் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும்,

அவரது மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என ஜப்பான் பொலிஸார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

அமண்டா போர்ஜஸ் டா சில்வாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 13,000 பேர் பின்தொடர்கின்றனர்.

தற்போது ஜப்பானில் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களை வெளிநாட்டவர்கள் செய்வதாக சமூக ஊடகங்களில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்