கந்தளாய் -சீனிபுர பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்க வித்தியாலயத்தில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில், மூன்று வகுப்பறைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
யானைகளின் இந்தத் தாக்குதலினால் பாடசாலையின் 3-ஆம், 4-ஆம் மற்றும் 5-ஆம் தர வகுப்பறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பாடசாலை கட்டிடச் சுவர்கள் மற்றும் தளபாடங்கள், மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் மற்றும் அலுவலக அலுமாரிகள், கணினிகள் மற்றும் குடிநீர் விநியோகத் தொகுதி (நீர் தாங்கி) என்பன சேதமடைந்துள்ளது.
வகுப்பறைகள் சேதமடைந்ததை அடுத்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக இருந்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதேச மக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.