பாகிஸ்தான் அரசாங்கம், நேற்று வெள்ளிக்கிழமை, டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை சுமார் 20 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் இவ்வாறு விலையை அதிகரித்துள்ளது
பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, அந்நாட்டு வரலாற்றில் பதிவான பாரிய விலை உயர்வாக ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெட்ரோல், 335.86 பாகிஸ்தான் ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல், 321.17 பாகிஸ்தான் ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் பாகிஸ்தானின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும், இது ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விலை அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரே லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதானமாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ‘ஹோர்முஸ்’ (Hormuz) நீரிணை ஊடாகவே எண்ணெயை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.