உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். அந்த பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பம் என்ற பேராபத்தும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதிக அளவில் புவி வெப்பமாவதால் நாம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்றுதான் பனிப்பாறைகள் உருகுவது. எங்கோ உலகின் ஒரு சில இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் நமக்கு என்ன என்ற அலட்சியம் தான் இந்த பிரச்னையின் வீரியத்தை உணரவிடாமல் தடுக்கிறது எனலாம்.
பனிப்பாறைகள் உருகுவாதால் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் அச்சுருத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முதலில் பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கும். கடல் நீர் நிலத்தில் புகுந்ததால் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்படும். விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டால் உணவு பஞ்சம் ஏற்படும் உணவு பஞ்சத்தை தொடர்ந்து இந்த உலகமே வறுமையை நோக்கித்தள்ளப்படும்.
பனிப்பாறைகள் உருகுவதால் உலகமே பாதிக்கப்படும் என்றாலும், முதலில் பாதிக்கப்படப் போவது யார் தெரியுமா? பனிப்பாறைகளில் இருந்து வரும் தண்ணீர் செல்லும் பாதையில் இருக்கும் ஏரிகளின் கரைகளில் வசிக்கும் மக்கள் தான். அப்படி இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளார்கள். இந்த அதிர்ச்சி செய்தி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய கால கட்டங்களில் இது போன்ற பனிப்பாறை உருகி வெள்ளம் ஏற்பட்டதற்கான சான்றுகளையும் பட்டியலிடுகிறது அந்த ஆய்வறிக்கை.
1941 ஆம் ஆண்டு பெரு நாட்டில் பனிப்பாறை நீரால் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிப்பாறை உருகி வெள்ளம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட்டு 330 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. 2017ஆம் ஆண்டு நம் அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டு மிக கனமழை ஏற்பட்டதோடு பனிப்பாறை உருக்கத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியது.
பருவநிலை சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தால் மட்டும் இதுபோன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுவதில்லை என்பது விஞ்ஞானிகளின் கருத்து. பனிப்பாறை உருகுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம் என எச்சரிக்கிறார்கள் அவர்கள். எப்படியாயினும் வேகமாக உருகும் பனிப்பாறைகளால் நான்கு நாடுகளில் இருக்கும் ஒன்றரை கோடி மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது உறுதியாகின்றது.