காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இக்கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிஃப் (வயது-43), பிரியங்கா பாட்லா (வயது-38). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் காதலித்து மதம் மாறி திருமணம் செய்துள்ளனர். இரு வீட்டாரும் இருவர்களின் திருமணத்தை எதிர்த்து வந்துள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியால்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.

ஆசிஃப் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றிலும், பிரியங்கா பாட்லா போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ள நிலையில் திடீரென பிரியங்காவின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் இவர்கள் வீட்டை சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து உடல் முழுவதும் இரத்தம் சொட்ட, சொட்ட கையில் கத்தியோடு வெளியே வந்துள்ளார் ஆசிஃப்.

நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன். தயவு செய்து பொலிசுக்கு தகவல் கொடுங்கள் எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என அழுதுபுலம்பியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , ஆசிஃப்-பிரியங்காவுக்கு குழந்தை இல்லாததால் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் பிரியங்கா பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் வேறுஒரு நபரோடு தகாத உறவில் இருந்ததாகவும், அதனை பலமுறை ஆசிஃப் கண்டித்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆசிஃப்பும், பிரியங்காவும் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் வழமை போல் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசிஃப், பிரியங்காவை அடித்துள்ளார். இதனால், கோபமடைந்த பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி தனது ஆடைகளை பையில் எடுத்து வைத்து வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளார்.

பிரியங்காவை தடுத்து நிறுத்திய ஆசிஃப் உள்பக்கமாக கதவை தாழிட்டுக்கொண்டு ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஆசிஃப் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவின் உடலை உடற்குராய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.