பதில் சட்டமா அதிபராகச் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க பதவியேற்கவுள்ளார்.
உயர்நீதிமன்றின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் நாளைய தினம் பதில் சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பதில் சட்டமா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி சட்டமா அதிபராகப் பதவியேற்ற சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
சட்டமா அதிபராகப் பதவி வகித்துவந்த சஞ்சய் ராஜரத்னத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு அரசியலமைப்புச் சபையிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி யோசனைகளை முன்வைத்திருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் யோசனைகள், அரசியலமைப்பு சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் தீர்மானத்துக்கமைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய கடந்த 26 ஆம் திகதியுடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில் பதில் சட்டமா அதிபராகப் பதவியேற்கவுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகமான பாரிந்த ரணசிங்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் பாரிந்த ரணசிங்கவின் மகனாவார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்