டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த 2025 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தத் திடீர் அனர்த்த நிலைமையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட வலுவூட்டல் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்த போது இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீடுகளை இழந்து தங்குவதற்குக் தங்குமிடம் அற்றவர்கள், தங்களது புதிய வீடுகளைக் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாகக் குடியிருப்பதற்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்த வீட்டு வாடகைக் கொடுப்பனவு மேலும் நீடிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அதிகபட்சமாக 06 மாதங்கள் வரை வழங்கப்பட்டு வந்த இந்த மாதாந்த வீட்டு வாடகை நிதியுதவியை, அதிகபட்சமாக 09 மாதங்கள் வரை நீடிப்பதற்குத் தேவையான சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளை வெளியிடுதல்.
பாறைக் கற்கள், மண் மற்றும் இடிபாடுகள் (சுவடுகள்) சேர்ந்ததனால் அழிவடைந்துள்ள விவசாய வயல் நிலங்களை, மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்தவாறு தயார்படுத்துதல்.
இதற்காக, மாவட்ட விவசாய அபிவிருத்தி பிரதி ஆணையாளர்கள் அல்லது உதவி ஆணையாளர்களினால் அங்கீகரிக்கப்படும் செலவு மதிப்பீட்டிற்கு அமைய, தொடர்புடைய நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று, குறித்த இடிபாடுகளை அகற்றி வயல்களை மீண்டும் தயார் செய்வதற்கான முறையான சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
கற்கள், மண்குவியல்கள் மற்றும் இடிபாடுகள் வீழ்ந்துள்ள இடங்கள் அல்லது மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில், அந்த அபாயங்களைக் குறைப்பதற்கான செயல்பாடுகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ளுதல்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள மண்சரிவு தணிப்புத் திட்டத்தின் மூலம் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகளை முன்னுரிமையடிப்படையில் பயன்படுத்துதல். தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைப் பொருத்தமான முறையில் மேற்கொள்வதற்கும், அனர்த்த நிவாரணம் மற்றும் புனரமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைத் திறைசேரி மூலமாக தடையின்றி ஏற்பாடு செய்து வழங்குதல்.