தலவாக்கலையில் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இனந்தெரியாத நபர்களால் நேற்று ஞாயிற்று கிழமை இரவு நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துக்களின் மீது தாக்குதல் நடாத்தியதில் முன் பக்க கண்ணாடிகள் உடைந்துள்ளது.

இதனை கண்டிக்கும் விதமாகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள், பேருந்துக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்காரணமாக பாடசாலை செல்லும்மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள்,  பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்