உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும்: பார்த்தீபன்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் அபிவிருத்திப் பணிகளில் பயனறும் வகையில் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் திணைக்கள உதவி ஆணையாளர் சூரியகுமார் பார்த்தீபன் தெரிவித்தார்.

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்ற சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் சேருநுவர பிரதேச சபையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் சனசமூக மன்றங்களின் பிரதிநிதிகளுக்குமாக இடம்பெற்ற ஒருங்கிணைந்த செயலமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிய மன்றத்தின் நிதி அனுசரைணயில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அமுலாக்கத்ததோடு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பிரதேசங்கள் தோறும் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

சேருநுவர நகர மண்டபத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சேருநுவர பிரதேச சபையின் அதிகாரிளும் அலுவலர்களும் அப்பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர் பொன்னுத்துரை சற்சிவானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் சனசமூக மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் கடமைகள் சட்டங்கள் தத்துவங்கள் பற்றி தெளிவூட்டிய கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் திணைக்கள உதவி ஆணையாளர் பார்த்தீபன், பிரதேச சபையின் தத்துவங்கள் 19(1) இன்படி மக்கள் உள்ளுராட்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் மக்கள் அதியுச்ச பயனுறும் வகையில், அவர்களின் பங்குபற்றலை இயலச்செய்தல் வேண்டும்.

பொது மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்தல், ஏதும் வேறு அதிகார சபையினால் கையளிக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தல், கிராமிய பெண்களுக்கு கிராமிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி அல்லது சமூக அபிவிருத்திக்கான மானியங்களை வழங்கல், கிராமிய மக்களுக்கான நிவாரணம் புனர்வாழ்வு என்பனவற்றை வழங்கல், அமைச்சின் முன் அனுமதியுடன் வர்த்தக அல்லது கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல சேவைகளை உள்ளுராட்சி மன்றங்களினால் ஆற்ற முடியும்” என்றார்.

இந்த செயலமர்வில் சேருநுவர பிரதேச சபையின் செயலாளர் மிஹிரி சௌம்யா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்