ஹொரணை, அங்குருவாதொட்ட வீதியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து, சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சுமார் 10 நாட்களுக்கு முன்னர், இந்த விற்பனை நிலையத்தின் முன்பக்கக் கண்ணாடியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இந்தத் திருட்டைப் புரிந்துள்ளார்.
மேலும், அவர் அன்றைய தினமே அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள்ளும் புகுந்து, சிகரெட்டுகள் மற்றும் பால் மா பாக்கெட்டுகள் உட்பட சுமார் 66,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட சுமார் 10 நாட்கள் விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காகப் பெற்றுக்கொண்ட மேலும் இரு நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த முக்கிய சந்தேகநபர், 1993ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வீடு உடைப்பு உள்ளிட்ட 15 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளி என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் நாளை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.