நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று சனிக்கிழமை காலை முதல் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் விநாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுறு ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.
அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் ஊடாக விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.