அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தொன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு-கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த குறித்த நபர், தற்போது திருமணம் முடித்து பாண்டிருப்பில் வசித்து வருவதாகவும், அவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிய வருகின்றது.
பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.