எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் இன்று சனிக்கிழமை தங்காலை, கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், அதுவரை உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
விசாரணைகளின் போது, தமக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இவ்வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசி ஒன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.