நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கனரக வாகனம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி, அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில், திடீரென்று தடையாழி (பிரேக்) செயலிழந்து ஹக்கல தாவரவியல் பூங்கா அருகாமையில் வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருடனும், கனரக வாகனத்திற்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப்புடனும் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
திட்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் விபத்து ஏற்பட்டமையால் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், போக்குவரத்து நேரிசல் அடிக்கடி ஏற்பட்டது.
நுவரெலியா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.