உப்பால் நிறைந்த செங்கடலின் மரணக்குளம்

செங்கடலின் அடிப்பகுதியில் 10 அடி நீளமான உப்புநீர் குளத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது பெரும்பாலான கடல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று தெரிவிக்கின்றனர்.

மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் செங்கடலின் ஒரு பகுதியாக விளங்கும் ‘மரணக் குளம்’ கண்டுபிடிக்கப்பட்டது. மரணக் குளம் என்று சொல்வதற்கான காரணம் அதன் உப்பு தன்மை தான். கடல் என்றாலே உப்பு நீர் தானே அதில் என்ன சிறப்பு என்று கேட்கலாம்.செங்கடலில் அரிய, அதிக உப்புத்தன்மை கொண்ட குளத்தை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். அந்த இடத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அந்த குளப் பகுதியில் சாதாரண கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது.

விஞ்ஞானிகள் குழுவில் இருந்த பேராசிரியர் சாம் புர்கிஸ், உப்புக் குளத்தில் ஆக்ஸிஜன் இல்லை என்றும், இதனால் வேறு ஏதேனும் உயிரினம் அங்கே வந்தால் இந்த தண்ணீரின் உப்புத் தன்மை தாங்க முடியாமல் இறந்துவிடும் என்றார். இந்த இடம் எகிப்து கரைக்கு 1.25 மைல் தொலைவில் உள்ளது. மீன்களுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் மிக ஆபத்தான இடமாக விளங்குகிறது.நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தை (ROV) பயன்படுத்தி 1,770 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தக் குளத்தை கண்டுபிடித்துள்ளது.

“சாதாரணமாக கடல் அடிவாரத்தில் இருக்கும் உயிர்கள் இங்கு அதிகம் காணப்படுவது இல்லை. இருப்பினும், இந்த உப்புநீர் குளம் சில உயிர்களின் வளமான சோலையாக காணப்படுகிறது. கம்பளம் போல் அடர்த்தியான நுண்ணுயிரிகள் இங்கே காணப்படுகிறது. இந்த நுண்ணுயிர்கள் பலதரப்பட்ட விலங்குகளை ஆதரிக்கின்றன” என்று பேராசிரியர் பெர்கின்ஸ் கூறினார்.

இந்த இடம் பல உயிர்களுக்கு சவக்குழியாக இருந்தாலும் சில நுண்ணுயிரிகளின் வாழ்விடமாக உள்ளது. இறந்த மீன்களை உண்ணும் விலங்குகளுக்கு அதன் உணவு ஊற்றாக இந்த உப்புக்குளம் அமைகிறது.

இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் விஞ்ஞானிகளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது கிரகத்தில் கடல்கள் எவ்வாறு உருவாகின என்பதைக் கண்டறிய உதவும் என்று விஞ்ஞானி கூறினார்.

இது பூமியில் வாழ்வின் வரம்புகளைக் கண்டறிய உதவும், பூமியில் மனிதர்களுக்கு தெரியாமல் புதைந்திருக்கும் லட்சக்கணக்கான அதிசயங்களுள் இதுவும் ஒன்று. வேற்றுகிரகங்களை தேடும் முன்னர் நம் பூமியில் உள்ள இந்த மாதிரியான அசாதாரண சூழல் கொண்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.