அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மத ஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 80,000 ரூபாவிற்கு குறித்த வேம்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.

ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட குறித்த மரத்துக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் தாம் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மாதப் பொறுப்பானவரிடம் வினா வினவியபோது குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்த நிலையில் உரிய பதில் வழங்கப்படவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்