-யாழ் நிருபர்-
2005இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச்செய்வோம் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
சுழிபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் ,எரிவாயு வாங்க வீதிகளில் வரிசையில் நின்றது வரலாறு.
அந்த நிலையினை மாற்றியமைத்ததோடு நாட்டில் பொருளாதாரத் தன்மையினை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான்.
வடக்கிற்கான 3 பாதைகளும் திறக்கப்பட்டதோடு உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகள் பலவும் விடுவிக்கப்பட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முடித்த ராஜபக்ஷ்கள் மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை செய்யவில்லை. வாழ்வாதார உதவிகளை செய்ய முன்வரவில்லை
இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர்.
2013 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது காணி விடுவிப்பிற்காக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
2005 இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் நாம் துன்பப்பட்டிருக்கமாட்டோம். அந்த தவறை மீண்டும் வடக்கு கிழக்கு மக்கள் விடக்கூடாது.
2005இல் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிக்கவுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணில் விக்ரமசிங்காவை வெற்றி அடையச் செய்வதன் மூலம் நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடிவதோடு தமிழருக்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்