கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி தவறுதலாக பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
தாயும், உயிரிழந்த குழந்தையும், அயலவர் வீட்டிற்கு சென்ற போது, தாய் கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக அயலவர் வீட்டிலேயே சிறுமியை விட்டு வீடு சென்றுள்ளார்.
அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாத நிலையில் அயலவர்கள் தாயாரிடம் சிறுமி வீடு வந்துள்ளாரா என வினவியுள்ளனர்.
அங்கும் குழந்தை இல்லாத நிலையில் தொடர்ந்தும் தேடிய பொழுது, பாதுகாப்பற்ற கிணற்றில் குறித்த குழந்தை வீழ்ந்து காணப்பட்டதை அவதானித்ததையடுத்து, உடனடியாக சிறுமியை மீட்டு தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதன் போனது, சிறுமி ஏற்கனவே இறந்துள்ளார் என வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா என்ற குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.