மோட்டார் சைக்கிளில் போதை பொருள் கடத்தல்: ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

மோட்டார் சைக்கிளில் போதை பொருட்களை கொண்டு சென்ற இளைஞன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பதியத்தலாவ வீதி 47, கட்டையில் வசிக்கும் 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை பொதி செய்து மஹியங்கனை பகுதியில் உள்ள உள் வீதிகளில் சென்று விற்பனை செய்வதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது சந்தேக நபரிடம் இருந்து 12000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட எழுபத்தி நான்காயிரம் ரூபா பணமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதுடன், அவருக்கு எதிராக பலியகொட விசேட குற்றப் பிரிவு மற்றும் மஹியங்கனை பொலிஸாரிலும் ஹெரோயின் தொடர்பில் மூன்று வழக்குகள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்