மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு நான்கு முறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு முறை மின் கட்டணம் திருத்தப்பட்டது. இலங்கை மின்சார சபையானது இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாவது மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டணத்தை 6 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை குறைப்பதற்கு முன்மொழிந்திருந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரேரணையின் அடிப்படையிலான முறைமை தொடர்பில் பல பிழைகள் காணப்படுவதாகவும், தற்போதைய நிலவரத்தை பொருத்து மின்சார கட்டணத்தை அதிக சதவீதத்தினால் குறைக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை மின்சார சபையின் புதிய மின்சாரக் கட்டண திருத்தப் பிரேரணை கடந்த 6ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முன்னர் கூறப்பட்டிருந்த மின்சாரக் கட்டணக் குறைப்பு அந்தப் பிரேரணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அடுத்த 6 மாதங்களுக்கு தொடர வேண்டும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் 10 முதல் 20 சதவீதம் வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்