சட்டவிரோதமான முறையில் இன்று திங்கட்கிழமை மரக்கட்டைகளை கடத்திச் சென்ற லொறி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உத்தரவை மீறி பயணித்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அலுவலகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்திச் சென்ற லொறி ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த லொறியில் பயணித்த கடத்தல்காரர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உத்தரவை மீறி லொறியை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது, வேக கட்டுப்பாட்டை இழந்த லொறி அருகிலிருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது லொறியில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.