ஜப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித உருவிலான ரொபோக்களை (Humanoid robots) பயன்படுத்த ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines) தயாராகி வருகிறது.
மே மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ரொபோக்கள் விமான ஓடுதளத்தில் பொதி சுமப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
சீனாவைச் சேர்ந்த ‘யூனிட்ரீ ரொபோட்டிக்ஸ்’ (Unitree Robotics) நிறுவனம் இந்த இயந்திரங்களை உருவாக்கியுள்ளது. இவை கனமான பொதிகள் மற்றும் சரக்குகளை நகர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 130 செ.மீ உயரம் கொண்ட இந்த ரொபோக்கள், சமீபத்தில் நடந்த சோதனையில் சரக்குகளை கன்வேயர் பெல்ட்டில் தள்ளுவது மற்றும் கைகளை அசைப்பது போன்ற செயல்களைச் செய்து காட்டின.
எதிர்காலத்தில் விமானத்தின் உட்புறத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் தரைவழி ஆதரவு உபகரணங்களைக் கையாளுதல் போன்ற பணிகளிலும் இந்த ரொபோக்களைப் பயன்படுத்த விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ‘ஜிஎம்ஓ இன்டர்நெட் க்ரூப்’ (GMO Internet Group) இணைந்து இந்தச் சோதனையை 2028ஆம் ஆண்டு வரை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளில் ரொபோக்கள் பயன்படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு மேலாண்மை போன்ற முக்கியமான பொறுப்புகள் தொடர்ந்து மனிதர்களின் கண்காணிப்பிலேயே இருக்கும் என்று ஜேஏஎல் கிரவுண்ட் சர்வீஸ் (JAL Ground Service) தலைவர் யோஷிடெரு சுஸுகி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளையில், உள்நாட்டில் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
2026ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ஜப்பானுக்கு செல்கின்றனர்.
இந்தச் சூழலில், விமான நிலையத்தின் பின்னணிப் பணிகளில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரொபோக்களின் உதவி அவசியமாகிறது என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதா தெரிவிக்கப்படுகிறது.