-யாழ் நிருபர்-
நாட்டில் வன்முறை சூழல் உருவாகிய நேரத்தில் ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்போற்று வழிநடத்த சரியானவர் என்பதை நான் எவ்வாறு அன்று திடமாக எடுத்துக் கூறியிருந்தேனோ அதேபோன்றுதான் அடுத்த அரசியல் பருவகாலத்திலும் இந்த நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் சிறப்பான எதிர்காலத்தை கொடுக்க அவரது தேர்தல் வெற்றி அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை காரைதீவில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றியை வலுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகைியில்,
சில சக்திகளின் சுயநலத் தேவைகளுக்காக நாட்டில் வன்முறை தலைதூக்கிய நேரத்தில் நாட்டை தற்தணிவுடன் பொறுப்பேற்று அந்த சூழ்நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற வழிகாட்டியவர் ரணில் விக்ரமசிங்க தான்.
குறிப்பாக ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் தற்துணிவுடன் ஆட்சியை ஏற்றார். இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய முயற்சித்தார்கள். அதுமட்டுமல்லாது ஓடி ஒளித்தார்கள்.
அவ்வாறு கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வதே நாட்டு மக்களாகிய உங்களது பிரதி உபகாரமாக இருக்கும்.
இதேவேளை மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்திடமோ அல்லது அநுரவிடமோ நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டம் எதுவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இத்தகையவர்களது போலி பிரசாரங்களை மக்கள் செவிசாய்க்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சரது சேவைகளை பாராட்டி பொன்னாடை போத்து மலர்மாலை அணிவித்து குறித்த நிறுவனத்தினரால் அமைச்சர் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் நினைவு சின்னங்களும் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.