இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட இரு வேறு கூட்டுச் சோதனைகளின் போது, சுமார் 43,050 கஞ்சா செடிகள் முற்றுகையிடப்பட்டு சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை, பலஹருவா மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் கதிர்காம பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இரகசியமாகப் பயிரிடப்பட்டிருந்த 19,800 கஞ்சா செடிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு கூட்டுச் சோதனையானது ஹம்பெகமுவ, உனகந்த மற்றும் அலிவல ஆகிய பகுதிகளில் மொனராகல பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து நடத்தப்பட்டது. இதன்போது, சுமார் கால் ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டிருந்த 23,250 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பெகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான கஞ்சா செடிகள் அனைத்தும் சம்பவ இடங்களிலேயே அதிகாரிகளால் தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.