கோப் குழு (COPE) முன்னிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆஜராக முடியாது என திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில், திட்டமிட்டபடி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என திறைசேரி செயலாளரிடமிருந்து இன்று புதன்கிழமை கடிதம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இணையத்தள நிதித் திருட்டு (Cyber theft) சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு, இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தீர்மானித்ததுடன், அவர்களை நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு பணித்திருந்தது.
குறித்த நிதிக் கொள்ளை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில், திறைசேரி செயலாளர் தனது இயலாமையை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.