இலங்கை சிறையிலுள்ள காரைக்கால் கடற்றொழிலாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கடலில் தொழில் செய்துகொண்டிருந்த வேளையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களது இயந்திரப் படகையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதலாவது கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கைது நடவடிக்கையில் சிக்கியவர்களில் காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச் சேர்ந்த பிரதீப் சூரியமூர்த்தி (வயது 29) என்பவரைத் தவிர ஏனைய 6 கடற்றொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில்தான் திருமணமான பிரதீப் சூரியமூர்த்திக்கு தொடர்ச்சியாக மருத்துவ வசதிகள் தேவைப்படும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். இவர்களைப் பராமரிப்பதற்கு குடும்பத்தில் வேறு எவரும் இல்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.