கல்முனையில் போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கு

-கல்முனை நிருபர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கான போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில் மதத்தலைவர்கள், திருமண பதிவாளர்கள், மருத்துவ மாதுக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் இங்கு வளவாளராக கலந்துகொண்டு பேசிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் திருமண பந்தங்கள் தொடர்பிலும் உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

நாட்டில் இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஆரோக்கியமற்ற வேகமான உணவுகள் தொடர்பில் கருத்துரைத்த வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் அந்த உணவுகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி ஆழமாக தெளிவுபடுத்தியதுடன் குழந்தைகள் வளர்ப்பு, முறையற்ற உணவுப்பாவனைகளினால் இளவயது கர்ப்பிணிகள் சமகாலத்தில் அனுபவிக்கும் நோய் நிலைகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கினார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டு போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பில் விளக்கம் கொடுத்தனர்.