இலங்கைக்கான பயண ஆலோசனையை இலகுபடுத்திய சுவிஸ் அரசாங்கம்

அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை அடுத்து சுவிஸ் அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகளை இலகுபடுத்தியுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்து எமக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த பயண இடமாக பார்ப்பதாக இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்தார்.

இதன் மூலம் சுவிஸர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் விஜேதுங்க சுட்டிக்காட்டினார்.

சுவிஸர்லாந்து அரசாங்கம், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது குடிமக்களுக்கு பரிந்துரை செய்திருந்த்து.

அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிஸர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்த்து.

இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் சுவிஸர்லாந்து அரசாங்கம் தனது குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.