-மூதூர் நிருபர்-
திருகோணமலை, தம்பலகாமம் – பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை பெற்றுத்தருமாறு கோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள்.
இதனையடுத்து அவருடைய பணிப்பின்பேரில் ஆளுநரின் ஆலோசகர் உட்பட ஒரு குழுவினர் நேற்று மாலை பத்தினிபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்கள்.
குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசகர் சிவராஜா, திருகோணமலை தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் நிக்களஸ், வனவளத்துறை அதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம் எனவும், ஆனால் துப்பரவு செய்ய முடியாது எனவும் வருகை தந்திருந்த வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் தமது மயானத்தை தமது பாவனைக்காக முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த விடயத்தை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாக ஆளுநரின் ஆலோசகர் குறிப்பிட்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராம மக்கள் மயானம் இன்றி இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
1970ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலாகாலமாக பத்தினிபுரம் கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த இடமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் வந்தபோது வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுடைய எதிர்ப்புக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும், ஒரு மனிதனுடைய இறுதி காரியத்தைக்கூட கௌரவமாக செய்ய முடியாதுள்ளதாகவும், அதனை மீட்டுத் தருமாறும் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
