இந்த நாட்டு முஸ்லிம் சமுதாயத்துக்காக அன்று குரல் கொடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக இயக்கம் மட்டுமே என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்தார்.
வரிப்பத்தான்சேனை பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
காத்தான்குடியில், ஏறாவூரில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தன்னந்தனியாக நின்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அந்த மக்களுக்கு பாதுகாப்பு முகாம்களை திறந்து கொடுத்தவர் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் மட்டுமே.
நீங்கள் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃபை கண்டிருப்பீர்கள். அவர் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இந்த மண்ணில் ஒரு அபிவிருத்தியை ஏற்படுத்தி ஒரு புரட்சியை செய்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு பிரதேசங்களில் அபிவிருத்தியை கொண்டு வந்த ஒரு மகான் இருக்கிறார் என்றால் அது நமது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் மட்டுமே.
அவ்வாறான ஒரு தலைமையின் பாசறையில் வளர்ந்தவன் நான். ஒரு பதவியில் அமர்ந்து புகழை சேர்க்க வேண்டும், இந்த பதவியில் இருந்து பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்று எமது மக்களின் தேவைகளை என்று நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். உங்கள் பிரதேசங்களான வாங்காமம் பிரதேசத்தில் பாடசாலைக்கு தேவையான நிதியான 5 மில்லியனுக்கு அதிகமான நிதி கொடுத்திருந்தோம்.
இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கட்டுமானப் பணிகளுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் நிதியை கொடுத்திருந்தோம். அதேபோன்று தாய் பள்ளியான, தலைமை பீடமான வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஐந்து மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரிப்பத்தான்சேனை பிரதான மைதானமான ஓர் அடையாளமாக இருக்கின்ற மைதானத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக ஐந்து மில்லியன் ரூபாய் ஒதுக்கி இருக்கின்றோம். இந்த மண்ணில் ஒன்றரை மாத காலத்தில் வீதிகள் என்றும் மைதானம் என்றும் பள்ளிவாசல்கள் என்றும் சமூக சேவைகள் என்றும் பெருமளவான நிதியை கொடுத்து இந்த மண்ணை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் எமது கடமையாக இதை செய்ய இறங்கி இருக்கின்றோம்
தாய்மார்களே இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் இன்று என்ன நடக்கிறது இந்த நாட்டில். நாங்கள் கடந்த ஆட்சியின்போது கோட்டீய என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் சமுதாயம் கருவறுக்கபட்ட போது நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்கவில்லை. அதற்கு எதிராக கடுமையாகப் போராடியிருக்கிறோம்.
சில சந்தர்ப்பங்களில் எங்களை நாங்களே பலிகொடுத்து தலையை அடமானம் வைத்து போராடியுள்ளோம் – என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்