அதிக விலைக்கு எரிவாயு விற்கப்பட்டதால் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்-

கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு இன்று 70 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளதாகவும், குறித்த சிலிண்டர் ஒன்று 2800 ரூபாவுக்கு விற்பனை செய்யவிருந்த போதிலும் சிலிண்டரினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனாலும், எரிவாயுவினை வைத்துகொண்டு முடிந்துவிட்டது என தெரிவித்ததனாலும் இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து கொட்டகலை நகரில் மக்கள் கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியினை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கொட்டகலை வர்த்தகம் சங்கம் தலையீட்டு குறித்த கடையில் எஞ்சியிருந்து எரிவாயு சிலிண்டர்களை பொது மக்களுக்கு தற்போது உள்ள விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலதிக விலைக்கு விற்கப்பட்டவர்களுக்கு மீதி பணத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக கொட்டகலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் எரிவாயு இன்றி மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.