கடல் சீற்றம் : படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் தீவிரம்

-மன்னார் நிருபர்-

வங்க கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையாமல் இருக்க மீனவர்கள் இன்று தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடல் சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலில் எழும் அலைகள் கடற்கரை ஓரம் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாம் சுவற்றின் மீது மோதி ராட்சத அலைகள் எழுந்து வருகிறது.

மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைவதால் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நான்காவது நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருவதால் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.