கேகாலை மாவட்டத்தில் உள்ள இரண்டு விடுதிகளில், மான் தலைகளை அலங்கார பொருளாக காட்சிப்படுத்தியிருந்த குற்றச்சாட்டில், குறித்த விடுதிகளின் முகாமையாளர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்புகளுடன் கூடிய மான் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக, கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, இரண்டு விடுதிகளில் இருந்து மான் தலைகள் மீட்கப்பட்டதுடன் குறித்த விடுதிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் முறையே கேகாலை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவனல்ல நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்படுவார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களை வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிக்கு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என திணைக்களம் குறிப்பிட்டது.