நிறுவை அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலவணை ஆகிய பிரதேச வியாபாரிகளின் நிறுவை/அளவை உபகரணங்களை 2022/2023 ஆம் ஆண்டுக்கு சரிபார்த்து முத்திரை பதிப்பதற்கென இன்று திங்கட்கிழமை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

மேலும், நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய திகதிகளில் காலை 9.30-3.30மணி வரை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வியாபாரிகள் தங்களுடைய வியாபார அளவை நிறுவை உபகரணங்களை கொண்டு சென்று முதிரையிட்டுக் கொள்ளுமாறு கல்முனை பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன் போது இலத்திரனியல் தராசுகள், பாரம்பரிய தராசுகள் நிறுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவீட்டுடன் கூடிய தராசுகள் சரி பார்க்கப்பட்டு சீல் செய்யப்பட்டு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

தராசுகளின் வகைகளுக்கேற்ப தராசுகள் இனங்காணப்பட்டு இச்செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் வர்த்தகர்கள் மீனவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் தத்தமது அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

மேலும், தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் இன்றி பல வியாபாரிகள் மோசடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது தொடர்பிலும் மக்களினால் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினதும் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.