விவசாயிகளுக்கு போலி மற்றும் காலாவதியான மருந்துகள்

-யாழ் நிருபர்-

 

இலங்கை பீடைநாசினி 1980 ஆம் ஆண்டு 33ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட விவசாய இரசாயனங்கள் மற்றும் போலியான மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண பதில் விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்தார்.

யாழ். குடாநாடு உட்பட வடமாகாணத்தில் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத போலி பீடைநாசினிகள், பங்கசு நாசினிகள், மற்றும் திரவப் பசளைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

இச் சட்ட விரோத மற்றும் போலி விவசாய இரசாயனங்களை விவசாயிகள் பாவிப்பதனால் நெற்பயிர் செய்கை உட்பட ஏனைய பயிர்ச்செய்கையில் நட்டம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.

தற்போது நெற்பயிற்சிகை இடம்பெறும் நிலையில், விவசாயிகளுக்கு காலாவதியான மருந்துகளை சில வர்த்தகர்கள் பற்றுச் சீட்டு இன்றி விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனங்களுக்கான விற்பனை சிட்டைகள் வழங்கப்படாததுடன் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான விவசாய இரசாயன விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளருக்கு எதிராக இலங்கை பீடைநாசினி 1980 ஆம் ஆண்டு 33ஆம் இலக்க சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் மேலும் தெரிவித்தார்.