மூன்றாம் பாலினத்தை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன் – வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்-

வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை யாழ். மத்திய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் மூன்றாம் பாலினத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மத்திய கலாச்சார மண்டபத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சும் இந்தியா தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் வட மாகாண ஆளுநர் பிரதமர் விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதன்போது மூன்றாம் பாலினத்தவர்கள் விழா மேடையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நிலையில் வட மாகாண ஆளுநரிடம் மஜகர் ஒன்றையும் கையளித்தனர்.

மூன்றாம் பாலினத்தவர்கள் பொது போக்குவரத்தில், அரச அலுவலகங்களில், பொது இடங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் குறித்த மஜகரில் குறிப்பிட்ட நிலையில் தமது பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளையும் உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஆளுநரை ஊடகவியலாளர்கள் வினவிய போது மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை தொடர்பில் கரிசனை கொண்டுளேன்.

மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை இங்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் காணப்படுகின்றவர்கள் தமது பிரச்சனைகள் சார்ந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் .

மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் தமது பிரதிநிதிகளையும் உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் முன் வைத்துள்ள நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்