கைவிடப்பட்டது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

கைவிடப்பட்டது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக நேற்று காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்றுடன் கைவிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை 8 மணியின் பின்னர் அனைத்து வைத்தியசாலைகளின் செயற்பாடுகளும் வழமைப்போல் இயங்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிராக, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இந்த தொழிற்சங்கம் நடவடிக்கையில் இணைந்திருந்தது.

அதற்படி, குறித்த சங்கத்தினால் அன்றைய தினம் 04 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், திங்கட்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், தமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு வழங்கப்படாததால் நேற்று முன் தினம் எஞ்சிய 05 மாகாணங்களிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

எனினும், தொடர்ந்தும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் நேற்றைய தினம் நாடுமுழுவதிலும் உள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்று நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

அந்த பிரேரணைக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் உள்ளடங்கியிருந்த சமிக்ஞைகள் குறித்து கவனம் செலுத்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு, தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 08 மணியுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்